Saturday, May 25, 2013

கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கியதன் பின்னணி என்ன?

அன்புள்ள மக்கள்ஸ்,

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் மாட்டியிருக்காங்க, மேலும் பலர் இதில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள்.  அப்புறம், மெ[பொ]ய்யப்பன் கைது, ரெய்டு, விசாரணை என்று செய்தித் தாட்கள் முதல் பக்கம் முழுவதும் இதே செய்திகள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன.  இதே வேகத்தை நாட்டில் நடந்த மத்த ஊழல்களுக்கும் காட்டியிருந்தா நாம் இந்நேரம் ஜப்பானையும் சீனாவையும் தோற்க்கடிச்சு எங்கேயோ போயிருப்போம்.  ம்ம்....  அதை நினைச்சா ஏக்கம் தான் வருது.   அதுசரி, இது இப்படி பூதாகரமாக கிளம்பியிருப்பதன் பின்னணி என்னவாக இருக்கக் கூடும், என்று நாம் யோசித்தோம். நமக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

கவனத்தை திசை திருப்பி காரியம் சாதித்தல் அப்படின்னு ஒரு கான்சப்ட் இருக்கு.  அதாவது, ஒருவருடைய கவனத்தை ஒண்ணுமில்லாத விஷயத்தில் திருப்பிவிட்டு விட்டு பெரிய மேட்டரை லவட்டுதல்.  உதாரணத்துக்கு நம் வீட்டில் திரியும் பல்லிகள் .  இவற்றை பூனை துரத்தினால் தங்களது வாலை கட் பண்ணி போட்டுவிட்டு அப்பால் போய்விடும், அந்த வால் அங்கேயே துடித்துக் கொண்டு கிடக்கும்.  துரத்தும் பூனை என்னடா அது என்று முன்னங்காலால் சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல்லி எஸ்கேப் ஆகி பாதுகாப்பான இடத்துக்குப் போய் விடும்.  கவனத்தை திசை திருப்புவதில் இது ஒரு விதமானடெக்னிக் என்றாலும் தன் உயிரைக் காத்துக் கொள்ள தன் உடல் உறுப்பையே இழக்கும் பல்லியை குறை சொல்ல முடியாது.

 

இதே  விஷயத்தை மனிதனும் செய்வான், ஆனால் அது மற்றவர்களிடமிருந்து எதையாவது அடிக்க!!.  வங்கிகளில் இது நடக்கும்.  சில லட்சங்கள் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வெளியே வருபவர் முன்னர், சில நூறு ரூபாய்களை கீழே போட்டுவிட்டு, "சார் பணம் கீழே கிடக்கிறது பாருங்கள்" என்பார்கள்.  அந்த கூமுட்டை தான் கொண்டு வந்த லட்சங்களை காரில் வைத்து விட்டு இந்த நூறுகளைப் பொறுக்கப் போவார், அந்த சமயத்தில் லட்சங்கள் காணாமல் போயிருக்கும்.


தனி மனித அளவில் இது என்றால், தேசிய அளவில் வேறு மாதிரி நடக்கும்.  ஒரு அரசு ஊழல் போன்ற கடும் பிரச்சனைகளை சந்தித்து மக்கள் மத்தியில் அவநம்பிக்கை  ஏற்ப்பட்டிருக்கும் தருணத்தில், அவர்கள் கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டு முக்கிய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்யும் செயல் இது.  வாட்டர் கேட் என்ற ஊழலில் சிக்கிய அமரிக்க அரசு மக்களின் கவனத்தை திசை திருப்ப அப்பாவி வியட்நாம் மீது படையெடுத்து அவர்களை பல இன்னல்களுக்குல்லாக்கியது.  ஆனால், வியட்நாம் எதிர்த்து போரிட்டு அமரிக்காவை மண்ணை கவ்வச் செய்தது, மேலும் அமரிக்க மக்களை அவ்வாறு ஏமாற்றவும் முடியவில்லை, அவர்களில் பெரும்பாலானோர் இது தவறு என்று வெளிப்படையாகவே போராடி அந்நாட்டின் அதிபரை கீழே இறக்கினர். அந்த மாதிரி புத்திசாலி மக்கள் எல்லா நாடுகளிலும் இருப்பார்களா?

இங்கே கிரிக்கெட் ஆட்டக்காரன் மோசம் பண்ணிட்டான் என்று அரசியவாதி சொன்னால், அது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை" என்ற கதையாகத்தான் இருக்கும்.  நாட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் என்று திரும்பிய பக்கமெல்லாம் ஊழல்.  பேப்பரைத் திறந்தால் சுத்தி சுத்தி இதே மேட்டர்.  ஆளுங் கட்சியின் செம்பு ரொம்ப அடி வாங்கிகிட்டே இருக்கு. தாங்க முடியல.  மக்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட வழி தான் என்ன?  கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம்.  அது ஒன்னு தான் இந்தியாவின் உயிர் மூச்சு.  ஆனா அது ஏற்கனவே ஊருபட்டது நடந்து கிட்டு இருக்கு.  சரி இன்னொரு வழி, இந்த சூதாட்டத்தை கிளறி விட்டு விடலாம்.  இப்போ பாருங்க, நாலஞ்சு நாளா எவனாச்சும் நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அப்படின்னு பேசுறானா?  மறந்திட்டான் இல்ல?  

கொஞ்சம்.....இருங்க......  இதனால் கிரிக்கெட் மயக்கத்தில் இருந்து மக்கள் வெளியே வந்திட்டா?  பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து கொன்ற கதையாகி விடுமே?   ஆனால், அது தான் நடக்காது.  தலையில் இடியே விழுந்து செத்தாலும் நம்மாளு கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பொது TV பெட்டியை விட்டு நகர மாட்டான்.  இப்போ கூட பாருங்க, நாடே இத்தனை அல்லோகலப் படும் பொது, நேத்திக்கு நடந்த MI, RR மேட்சில் கூட்டம் குறைஞ்சுதா என்ன?  


செய்தித் தாட்களுக்கும் தொலைக் காட்சிகளுக்கும்நல்ல தீனி, பரபரப்பு.  அப்புறம் கொஞ்ச நாளில் நீங்களும் மறந்திடுவீங்க, இந்த சூதாடிகளும் எஸ்கேப்.  மேட்டர் புஸ் வானம் தான்.  சாமியார் மேட்டரில் இருந்து,  லட்சம் கோடிகளில் நடந்த ஊழல்  வரைக்கும் இதே கதை தான்.   இதிலே மட்டும் ஏதோ பெரிசா கிழிக்கப் போறானுங்கன்னு எதிர் பார்த்தால் ஏமாளி நாம் தான்.


ஆனா ஒண்ணுங்க.  சீட்டாட்டம், கேரம் போர்டு, கிரிக்கெட்டு..........  இது மூனுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியலைங்க!!

இன்னொரு மொக்கைப் பதிவில் சிந்திப்போம்........வணக்கம் மக்கள்ஸ்......!!

Thursday, May 23, 2013

இந்த கேள்விகளுக்கு யாரவது பதில் சொல்லுங்களேன்!!

கேள்விகளைக் கேட்டிருப்பவர்: களவாணி பய
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-1)

1.நாய சுடுற மாதிரி நடு ரோட்டுல சுடனும்ன்னு சொல்லுறாங்களே...எந்த நாய நடு ரோட்டுல சுட்டுருக்காங்க...??

2.காமசூத்ரா தமிழ் பிட்டுப்படமா இல்ல மலையாள பிட்டுப்படமா ..?

3.மலையாளிகளின் ஓணத்துக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில்பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா..?

4.தெலுங்கு வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில் தமிழ் புத்தாண்டுக்குவிடுமுறை விட்டார்களா..?

5.புல் டைமா இருந்த Facebook இப்ப பார்ட் டைமா ஆயிடுச்சி உருப்புட்ருவனோ....?

6.பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?

7.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??

8. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?  [
கருமம் எந்த நேரம் பார்த்தாலும் பெட்ல இருக்குற பேசண்டுக்கு க்ளுகோஸ் எத்துற மாதிரி இந்த போனுக்கு சார்ஜ் போட வேண்டி இருக்கு ...:((]

9.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?

10.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
 
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-2)

1.வேலைசெய்ற மாதிரியே சீரியஸா மூஞ்ச வச்சிருந்தாலும்,என்ன Facebook ?னு கேக்குறானுக எப்டிதான்டா கண்டுபிடிக்கிறீங்க ராஸ்கல்ஸ்?!

2.பொண்ணுங்க அன்பானவங்க ன்னா, குழந்தைங்க எல்லாம், ஏன் “மிஸ் அடிப்பாங்க, திட்டுவாங்க” ன்னு பயப்படுறாங்க..?

3.Vote ID CARD- புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயவது அழகாய் இருப்பாரா ..?

4.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே .? அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..? கண் மை மட்டும் போதாதா..?

5.தன்காதலை புனிதம் என்று சொல்லும் எந்த அண்ணனும் தங்கை காதலை அப்படி நம்புவதில்லை ஏன்?

6.வெளிய பொண்ண பாத்தா பொறிக்கினு சொல்றாங்க,,வீட்ல போய் பாத்தா மாபிளைன்னு சொல்றாங்க அது ஏன் ..?( கிரேசி வேர்ல்ட்..)

7.இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்" என்று எட்டடி உயரச் சுவற்றில் எழுதியிருக்கிறார்கள். சுவற்றில் ஏறியெல்லாமா சிறுநீர் கழிக்கிறார்கள் ?

8.எப்போ பேஷன் டிவி வச்சாலும் அதுல வர பொண்ணுங்க நடந்துகிட்டே இருக்காங்க அதுனாலதான் அவங்க எப்பவும் ஒல்லியாவே இருக்காங்களோ...??

9.திருமணத்தில் தாலி கட்டும்போது மருமகனை நினைத்து பெண்ணின் பெற்றோர்கள் அழுவது ஏன்....??

10.எல்லா public toiletலயும் I LOVE YOU ன்னு எழுதிவச்சுருக்கானுக! டேய் நீங்க லவ் பண்ணுரது காதலியவா? கக்கூசயா?
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் (part-3)

1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?

2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?

3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?

4.வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?

5.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் இன்னும் ஏன் மாற்ற வில்லை ..?

6.பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?

7.கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறையின் கீழே வராதா ..?

8. (a + b)2 = a2 + 2ab + b2... தக்காளி, என்னிக்கு இந்த கணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுது..?

9.கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா?

10. 500-வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் தரவில்லை ..?
 

Tuesday, May 21, 2013

இந்திய கிரிக்கட் ரசிகன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்........

அன்புள்ள மக்கள்ஸ்,

ஒரு எதிரி நாடு நம் இறையாண்மைக்கு ஊரு விளைவிக்கும்போது அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு உலகத்துக்கே நாம் ஒரு  காட்டாகத் திகழ்கிறோம்.  அப்படி என்ன இராணுவத்தை அனுப்புவோமா?  இரவோடு இரவா எதிரி நாட்டுக்குள் புகுந்து சமூக விரோதக் கும்பல்களின் கதையை முடிப்போமா? அல்லது இராஜ தந்திரமாக செயல் படுவோமா?  இதெல்லாம் விவரமில்லாத அமரிக்கா மாதிரி நாடுகள் செய்வது.  நாம அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல ஒரு வேலை செய்வோம்.  என்ன அது?  உங்க கூட கிரிக்கெட் ஆட மாட்டோம்னு கா.....  விட்டிடுவோம் அவ்வளவுதான் அவன் வழிக்கு வந்தே தீருவான்.   இப்போ இப்படித்தான் பாகிஸ்தானை நாம் வழிக்கு கொண்டு வரப் பாத்துகிட்டு இருக்கோம். அப்புறம் இப்போ கூட இலங்கையில் தமிழர்கள் துயரை கிரிக்கெட்டை வச்சு தீர்த்திருக்கோம்.  என்ன அது?  இலங்கை வீரர்களை சென்னையில் IPL கிரிக்கெட் மேட்ச் எதுவும் ஆடக் கூடாதுன்னு சொல்லிட்டோமுல்ல.....!!  புரவென்ன இலங்கைத் தமிழர் பிரச்சினை இனி வரவே வராதுல்ல......... எப்பூடி....!! இப்போ சீனா மட்டும் கிரிக்கெட் ஆடினா அதனுடனான எல்லை பிரச்சினையும் ஈசியா தீர்த்திருப்போம், துரதிர்ஷ்டவசமா அந்த கருமாந்திரத்தை அவங்க ஆடுவதில்லை.  என்ன பண்ணி தொலைக்கிறது....:((

ஒரு கலாத்தில் கிரிக்கெட் என்பது ஐந்து நாள் ஆடப் படும் டெஸ்ட் மேட்சுகளாக நடத்தப் பட்டன.  அதையும் அஞ்சு நாள் சோறு தண்ணி இல்லாம உட்கார்ந்து கிட்டு காதில் டிரன்சிஸ்டரை வச்சுகிட்டு நம்மாளு கமண்டரி கேட்டு இந்தியாவை காப்பாத்தினான்.  இவை பெரும்பாலும் டிராவில்தான்  முடியும் எப்பவாச்சும் தான் வெற்றி தோல்வி என ரிசல்ட் வரும், பரபப்பான ஆட்டம் என்பது அதனினும் அரிதாகவே இருக்கும்.   

இந்த மாதிரி குறைகளைப் போக்கணும்னு அறிவாளிங்க ரூம் போட்டு யோசித்ததன் விளைவாக உருவானதுதான் ஒருநாள் மேட்ச்.  ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் விளையாடலாம், ஆட்டம் ஒரே நாளில் முடியும், தினமும் வெற்றியா தோல்வியா என முடிவு தெரியும் பரபப்பாகவும் இருக்கும்.   இப்படியெல்லாம் நப்பாசையுடன் ஆரம்பிக்கப் பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் பயலுவ 60 ஓவர்கள் தாக்குப் பிடிப்பதில்லை, எனவே அப்படியே 50 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது.  இதை தொலைக்காட்சியில் பார்த்து நம்மாளு நாட்டைக் காப்பாத்தினான்.

இதிலும் சிக்கல்.  முதல் 40 ஓவர் டெஸ்ட் மேட்ச் மாதிரி இருக்கிறது அந்த கடைசி பத்து ஓவரில் தான் பரப்பாகவும், த்ரில் ஆகவும் இருக்கிறது.  அதை மட்டும் தனியா எடுத்துப் போட்டுப் பார்த்தா எப்படி இருக்கும்?  அதன் விளைவுதான் இப்போ 20-20.  இதை இணையத்தில் உட்கார்ந்து பார்த்து தேசபக்தியை நம்மாளு காண்பிக்கிறான்.


அதிலும் மழை அது இது என வந்தால் பத்து ஓவர், 8 ஓவர் எனவும் குறைப்பதும் நடக்கிறது.  [ஆட்டம் பார்க்க வந்த பயலுவ ஏமாந்து போகக்கூடாது என்ற நல்ல எண்ணமோன்னு தப்பா நினைக்கப் படாது, டிக்கட்டு காசை திருப்பத் தராமல் ஏமாற்ற இதுவும் ஒரு வழி.  ஹி ..........ஹி ..........ஹி ..........].  அடுத்து டாசை ஜெயிக்கரவங்களே மேட்ச்சையும் ஜெயிச்சதா ஒரு ரூல் கொண்டு வந்தாலும் வரலாம், அதற்கும் நம்மால் காசு குடுத்து போய் உட்கார்ந்துகிட்டு பார்க்க ரெடியா இருக்கான், பொறவென்ன!!

இப்படி நம்ம தேச பக்திக்கு குந்தகம் விளைவிக்கும் விதமா எவனோ ரெண்டு மூணு பயலுங்க பணத்துக்கு ஆசைப் பட்டு சூதாட்டக் காரர்களின் சொல்லுபடி வேணுமின்னே மேட்ச் தோற்கிற மாதிரி ஆடி  இருக்காங்க.  நாம் எப்பேர்பட்டவங்க?   எலக்ஷனுக்கு ஓட்டு போட காசே வாங்காத யோக்கியனுங்க,லஞ்சமே குடுக்காதவனுங்க, சத்தியம் நேர்மையில் அரிச்சந்திரனுங்களாச்சே, மேலும் நாட்டை ஆள்பவர்கள் எல்லாம் திருவாளர் பரிசுத்தம், மக்கள் சேவையைத் தவிர ஒண்ணுமே அறியாதவங்க, பெண்டாட்டி பிள்ளைக்கு சொத்தே சேர்க்காதவங்க, சுவிஸ் பேங்க் ஈரோடு பக்கமோ, தூத்துக்குடி பக்கமோ இருக்கும்னு நினைக்கிறவங்க, கையில் கரைன்னு படிஞ்சா அது அவங்க காருக்கு போடும் கிரீசாத்தான் இருக்கும்.   இப்படியெல்லாம் திரும்பிய பக்கமெல்லாம் யோக்கியனுன்களா இருக்கும் நாட்டில் இப்படி ஒரு கேவலம் நடந்தா சும்மா விடுவோமா?



பொங்கி எழுதிட்டோம், உடனே சென்னையில் ரெய்டு, புக்கிகள் கைது, விசாரணை, IPL கிரிக்கெட்டுக்கே தடை போடச்சொல்லி கோர்ட்டில் வழக்கு,  இப்படி பரபரன்னு நடவடிக்கை எடுத்திடோமில்ல!!  எல்லாத்துக்கும் மேல சூதாட்டம் பண்ணியவன் கதையை வச்சு கேரளாவில் ஒரு சினிமா ஆரம்பிபிச்சாச்சு.  அட நாறப் பசங்களா காந்தி படத்தையே நாப்பது வருஷம் கழிச்சு தாண்டா எடுத்தாங்க, அதுவும் நீங்க இல்லை ஒரு வெள்ளைக்காரன் தான் எடுத்தான், மாட்டி  நாலுநாள் கூட ஆகல அதுக்குள்ளே இவனுங்க கதையை படமாக்க ஆரம்பிச்சுட்டீங்களா?  நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா.

அதுசரி, இவனுங்க மாட்டியதால IPL பார்க்கப் போறவன் நிறுத்திட்டானா?  நீலப் படத்தில் வந்த சாமியார் மடத்துக்கு போகாம விட்டோமா என்ன?  அப்புறம் இதை மட்டும் ஏன் நிறுத்தனும்?

மேட்சுகள் சூதாட்டக் காரர்களால் தீர்மானிக்கப்  படுது, நிசம்தான். அதனால என்ன, தொலைக் காட்சி அழுமூஞ்சி சீரியல் கூடத்தான் எவனோ கதை எழுதி டைரக்ட் பண்றான் பார்க்கவில்லையா?  இதை மட்டும் ஏன் வுடனும்?


ஐயா, எங்களுக்கு கார்கிலில் பனி மலையில்துப்பாக்கி ஏந்தி காவல் காப்பவனோ, இல்லை உயிரையும் விடுபவனோ கலப்பையை சுமந்து உழைத்து அரிசி தரும் விவசாயியோ நாட்டுக்கு உழைப்பவனாக தெரியவில்லை  கிரிக்கெட் மட்டையை கையில் வைத்திருப்பவன்தான் நாட்டைக் காப்பவன்.  அவன் மேட்சில் சூதாடினா என்ன, நடிகையோட கும்மாளம் போட்டா என்ன, எங்களை பண்ணி மூத்திரத்தை விட கேவலமானதை பாட்டிலில் போட்டு குடிக்கச் சொன்னா என்ன?  அவன்தான் தேசத்தைக் காப்பவன்.  எங்களுக்கு கிரிக்கெட் போதும், அதுல தான் எங்க வீரத்தை கமிப்போம்.  அதுல எதாச்சும் தப்பு தண்டா நடந்தா கொதிச்சு போயிடுவோம், மத்தபடி நாடே கொள்ளை போனாலும் எருமை மட்டு மேல மலை பெஞ்சா மாதிரிதான் இருப்போம்  அது தான் எங்களுக்கு தெரிஞ்ச தேச பக்தி.

வணக்கம் மக்கள்ஸ்!!

Thursday, May 16, 2013

இனி எக்ஸாம் வைத்து கேள்வி கேட்பீங்க?




1.   எந்த போரின் போது மாவீரன் நெப்போலியன் இறந்தார்?

அவர் கடைசியா சண்டை போட்டாரே அந்த போராத்தான் இருக்கணும்.

2. சுதந்திரப் பிரகடனம் எங்கே கையொப்பமிடப் பட்டது?

பேப்பர் மேலதான்.

3.  தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் நிலை என்ன?

திரவ நிலை.

4.  விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

கல்யாணம்.

5.  பரீட்சைகள் வைப்பது எதற்கு?

பசங்களை பெயிலாக்குவதற்க்கு.

6.  எட்டு பொழுதுகள் ஒருத்தர் தூங்காமல் இருப்பது எப்படி?

ரொம்ப சிம்பிள்.  இரவு முழுதும் தூங்கிட்டு பொழுது விடிஞ்சதும் விழிசுக்கணும்.

7.  உங்களின் ஒரு கையில் 4 ஆரஞ்சும், 5 ஆப்பிளும் உள்ளன, இன்னொன்றில் 5 ஆரஞ்சும், 4 ஆப்பிளும் உள்ளன, அப்போ மொத்தத்தில் உங்ககிட்ட என்ன இருக்கும்?

பெரிசா ரெண்டு கை இருக்கும். பொறவு எப்படி இத்தனை பழத்தையும் வச்சிருக்க முடியும்!!

8. ஒரு சுவற்றை கட்டி முடிக்க 8 ஆட்களுக்கு 10 நாட்கள் பிடித்தது.  அதே சுவற்றை 4 பேர் கட்டி முடிக்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?

அதுதான் அந்த எட்டு பேரு ஏற்கனவே கட்டி முடிச்சிட்டாங்களே, அதனால
டைம் எதுவும் தேவைப்படாது

9.  வேக வைக்காத கோழி முட்டையை சிமென்ட் தரை மேல் உடையாமல் போடுவதெப்படி?

தாராளமா போடலாம் சிமென்ட் தரை ஒன்னும் ஆகாது!!

10. ஒரு ஆப்பிளை ரெண்டா கட் பண்ணி அதில் ஒரு பாதியை எடுத்தா அது எது மாதிரி இருக்கும்?

அந்த இன்னொரு பாதி மாதிரியே தான் இருக்கும்.

11.  காலையில் எதை சாப்பிட முடியாது?

லஞ்சும், டின்னரும்.

நன்றி:   Facebook






Friday, May 10, 2013

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்கள்ஸ்,

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 அந்த கூட்டு பெருங்காயம் .....

 இந்த கூட்டு பெருங்காயம் .....

 

அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். 

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?

 

ஒரு வகையான அராபிய பிசின் 60%, 

மைதா 30%, 

பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% 

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ........... 

 

படத்திற்கு நன்றி: ஆயுர்வேத மருத்துவம்


இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

இதைப் பத்தி ஒரு  பதிவை பார்த்தேன், நான் ரசித்தவை லிஸ்டில் போடலாம்னு நினைச்சேன், பிரச்சினையின் தீவிரம் காரணமாக லிங்கை தனிப் பதிவாக போட முடிவு செய்தேன்.  இதை தெரிந்தவர்கள் எல்லோருடனும் மெயில் மூலமாகவோ, அல்லது வாய்மொழி மூலமாகவோ கூட பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

Thursday, May 9, 2013

எதையாச்சும் மூணு வரி எழுதிட்டா அது ஹைக்கூ ஆயிடுமா?


வணக்கம் மக்கள்ஸ்!!

இப்போ யாரைப் பார்த்தாலும் கவிதை எழுத ஆரம்பிச்சிடாங்க.  நமக்கு கழுதையைப் பத்தி தெரிஞ்ச அளவுக்கு கூட கவிதையைப் பத்தி தெரியாது. கவிதை எழுதுவதற்கு சில கட்டுப் பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு இல்லாமல் எழுதுவது நெட்டே இல்லாமல் டென்னிஸ் ஆடுவது போல அப்படின்னு யாரோ விஷயம் தெரிஞ்சவங்க உவமை சொல்லியிருக்காங்க, ஏனோ தெரியலை நமக்கு இந்த உவமை ரொம்ப புடிச்சுப் போச்சு.

ஆனால் இன்னைக்கு கவிதைன்னு நம்மாளுங்க எழுதுவதை படிச்சா வேடிக்கையா இருக்கு.  ஒரு வரியில் எழுதுவதை மடக்கி மடக்கி நாலு வரியாக எழுதினால் அது கவிதை என்ற ரேஞ்சில் தான் அவை இருக்கின்றன, உரைநடைக்கும் அதற்கும் வேறுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னைக்கு நம்முடைய மெயின் டாபிக் கவிதை அல்ல, ஹைக்கூ கவிதை!!

ஹைக்கூ ஜப்பானில் ஆரம்பித்திருக்கிறது.  கவிதை எழுத விதிகள் இருப்பது போலவே இந்த குறுங் கவிதை எழுதுவதற்கும் சில விதிமுறைகள், மரபுகள் இருக்கு.  இதைப் பத்தி பல இணைய தளங்களில் நண்பர்கள் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.


ஹைக்கூ எழுத கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மரபுகளில் பலவற்றையும் பின்பற்றாத நம்மாளுங்க, ஒன்றே ஒன்றை மட்டும் தப்பாம செய்கிறார்கள்.   அது மூன்று வரிகளில் எழுதுவது!!  கொடுமை என்னவென்றால் உரைநடையை மடக்கி மடக்கி எழுதி அதை கவிதை எனும் அன்பர்கள், இங்கேயும் மூன்று வரி உரைநடையை எழுதிவிட்டு அதை ஹைக்கூ என்று சொல்லிக் கொள்வதுதான்.  அதிலும் சிலர் நான்கைந்து வரிகளை எழுதவும் செய்கிறார்கள் என்பது இன்னமும் வேடிக்கை.

ஹைக்கூ விதிமுறைகளைப் பற்றி மேல் சொன்ன தளங்களிலோ, வேறு தளங்களிலோ பார்த்துக் கொள்ளுங்கள், ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.    அது, ஹைக்கூ மூன்று வரிகளில், முதல் இரண்டு வரிகளைப் படித்தாலும்  நீங்கள் சொல்ல வருவது விளங்கக் கூடாது, மூன்றாவது வரியைப் படித்த பின்னர்தான் முதல் இரண்டு வரிகளும் சேர்த்து அர்த்தம் விளங்க வேண்டும்.  அதுதான் ஹைக்கூவின் ஸ்பெஷாலிட்டியே!!

இதை மேற்கண்ட இணைய பக்கத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்: 

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.

உதாரணம்:

எனக்கும் அவளுக்கும்
ஒரு ஒற்றுமை
என் நண்பனைப் பிடித்துப்போனதுதான்!

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா.முத்துக்குமார்


உன் முகத்தை காண
கணக்கில்லா ரசிகர் கூட்டங்கள்.
நிலவினை சுற்றி நட்சத்திரங்கள்...

வண்ணப்
புடவைகளின் அணிவரிசை.
"பட்டாம் பூச்சிகள்"... 

கடும் வெயிலில்
இன்னும் ஆடும்
காலி ஊஞ்சல்!.  [சுஜாதா]

வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்
குழந்தையின் கிறுக்கல்கள்
- சீனு. தமிழ்மணி

ஆனால், இவையெல்லாம் ஹைக்கூவா?

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

மலர்கள் அடர்ந்த சோலை
ரம்மியமான மாலை
புத்தகத்துடன் நான் 

இதெல்லாம் ஹைக்கூவாம்.......செத்தாண்டா சேகரு...

எனவே மக்களே ஹைக்கூவை ஹைக்கூவா எழுதுங்க ஒருவரி உரைநடையை மூணு வரியாக்கி அதுதான் ஹைக்கூன்னு  சொல்லி சாவடிக்காதீங்க....

வணக்கம் மக்கள்ஸ்!! 

Monday, May 6, 2013

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வெள்ளை நிற உணவுகள்.

வணக்கம் மக்கள்ஸ்!!


எங்க அலுவலகத்தில் ஒரு மலையாளி.  தினமும் காலையில் வீட்டிலேயே சிற்றூண்டியை முடித்துவிடுவான்.  போதுமான அளவுக்கு  உண்டாலும், அலுவலகத்திற்கு வந்து கேண்டீனில் அன்றைக்கு பரோட்டாவும், கொண்டைக்கடலை குருமாவும் இருக்கிறது என்றால் போதும், அவனால் நண்பர்கள் சாப்பிடுவதை  பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, அதையும் ஒரு பிளேட் வாங்கி வெட்டுவான்.  பசிக்காக அல்ல, ருசிக்காக!!  மைதாவில் செய்யப்படும் இந்த பரோட்டாவின் ருசிக்காக  நம்மில் பலர் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.  இது மட்டுமல்ல, பேக்கரியில் தயாராகும் கேக்குகள், ப்ரெட், பிஸ்கட்டுகள் முதலான பல எண்ணற்ற அயிட்டங்களில் மைதாவே முதலிடம் வகிக்கறது.


நாட்டில் அதிக அளவு பரோட்டா சாப்பிடும் கேரளத்தில் நீரிழிவு நோயும் கோரத் தாண்டவமாடுகிறது.  இதை உணர்ந்த அவர்கள் தற்போது மைதா எதிர்ப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.  ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற இடங்களில் மைதா தடை செய்யப் பட்டுள்ளது.



கோதுமையை அரைத்து கிடைக்கும் மாவில் செய்யும் சப்பாத்தி உடலுக்கு நல்லது, ஆனால், அதே கோதுமையில் இருந்து கிடைக்கும் மைதாவில் அப்படி என்னதான் பிரச்சினை?  முழு கோதுமையை அரைத்து மாவாக்கும் போது அதன் உமியில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கிறது,  கோதுமையின் உள்ளே இருக்கும் மாவு மேலே உமியில் உள்ள நார்ச்சத்து இரண்டும் நமக்குத் தேவை,  அதுவே  முழுமையான [wholesome food] ஆகும்.  கோதுமை உமி ஜீரணத்துக்கு நல்லது, உடல் எடை உயர அனுமதிக்காது, இன்சுலினை சுரக்க வைத்து  நீரிழிவைத் தடுக்கும், குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வராமல் காக்கும், மிகவும் நல்லது. உமியின் நார்ச்சத்தை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் மாவு மாத்திரம் உண்பது முழுமையாகாது.  அதுமட்டுமல்ல, உமியை நீக்கினாலும் கோதுமை மாவின் நிறம் வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்காது.  அவ்வாறு வெண்மையாக்க, Benzoyl peroxide என்னும் இரசாயனம் பயன்படுத்தப் படுகிறது.  இது தலைமுடிக்கு அடிக்கப் படும் ஹேர் டை யில் கலக்கப் படும் விஷமாகும். அடுத்து மாவை மிருதுவாக்க Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  ஆகியனவற்றைப் பயன்படுத்துகின்றனர்.  இதன் விளைவு என்ன?  கிட்னி அடிவாங்கும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள்  வரும்.  எனவே மைதா, அது சம்பத்தப் பட்ட பொருட்களை அறவே நீக்குவது நலம் முழு கோதுமை உணவுகளைச் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


மேலும் விபரங்களுக்கு:
தினகரன் செய்தி: பரோட்டாவுக்கு எதிராக பிரச்சாரம். மைதாவுக்கு மயங்காதீர்கள்.
தினகரன் செய்தி: பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்? 
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? [கழுகு]
WHITE_DEAD_ON_YOUR_PLATE [பவர் பாயின்ட்]


இதற்கடுத்து நாம் தினமும் உண்ணும் அரிசியைப் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது.  நாம்  நாவை மட்டுமல்ல கண்ணையும் திருப்திப் படுத்த உணவு உன்ன நினைக்கிறோம் விளைவு வெள்ளை வெளேர் என்ற நிறத்தில் அரிசி இருக்க வேண்டும் என நினைத்து அதை நன்றாகப் பாலிஷ் செய்து வாங்கி உண்கிறோம்.  உண்மையில் பிரவுன் அரிசி எனப்படும், சிவப்பு நிறத்தில் உள்ள கைக்குத்தல் அரிசியே நமக்கு நல்லது.  தற்போது மெஷீனில் அரைத்தாலும், கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசி கிடைக்கிறது.  ஆனால் ருசிக்கு மயங்கிய நாம் அதற்க்கு மாறுவதில்லை.  பாலிஷ் செய்த அரிசியும் மேலே சொன்னபடி முழுமையான உணவு இல்லை.  வெள்ளை அரிசியையே  உண்டு பழகிய நமக்கு சிவப்பரிசிக்கு மாறும் போது ஜீரணப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால் பழக்கிக் கொள்வது நல்லது.




எல்லாவற்றுக்கும் மேலாக மேற்ச்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் ஜுஜுபி என்று சொல்லுமளவுக்கு நம் உடல் நலத்தை அழிக்கும் ஒரு அரக்கன் இருக்கிறான்.  நம்மில் பலருக்கும் இவன் அரக்கன் தான் என்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறோம்.  உங்களால் கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியாது, அவன் பெயர்:  வெள்ளைச் சர்க்கரை!!  இதை மட்டும் அறவே உங்கள் உணவில் இருந்து நீக்கிவிட்டால் போதும் உங்களுக்கு வயதான காலாத்தில் வரும் பெரும்பாலான வியாதிகளைத் தவிர்க்க முடியும்.  எல்லா வயதினர் ஆரோக்கியத்துக்கும் ஊரு விளைவிக்கும் கொடிய அரக்கன் இவன்.  எப்படி?  அச்சு வெல்லத்தில், சர்க்கரையும் அதை ஜீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சேர்த்து கிடைக்கின்றன.   ஆனால், வெள்ளைச் சர்க்கரையில் சர்க்கரை மட்டுமே உள்ளது, அதைச் சீரணிக்க உதவும் விட்டமின்களும் மினரல்களும் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் ஆகப் பிரிக்கப் பட்டு சாராயம் காய்ச்சப் போய்விடுகிறது. நாம் சர்க்கரையை உண்ணும் பொது அதைச் சீரணிக்க நம் உடலின்  தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் ரிசர்வில் இருந்து சரக்கரையைச் சீரணிக்க செலவிடப் படுகிறது.   இவ்வாறு நாளடைவில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான விட்டமின்களும், மினரல்களும் தொடர்ந்து இழந்த பின்னர் உடல் ஆரோக்கியம் படிப்படியாகச் சரிய ஆரம்பிக்கறது, இது எல்லா உறுப்புகளையும் தாக்குகிறது.  சர்க்கரை வியாதி உட்பட எல்லாம் எளிதில் வந்து விடும்.    சர்க்கரை வியாதிக்கு சர்க்கரை உண்ணுதல் நேரடியாக காரணமாகா விட்டாலும் மறைமுகமாக காரணமாகிறது.

அப்படியென்றால் இனிப்பே இல்லாத வாழ்க்கையா?  அது தான் இல்லை, கரும்பு வெல்லம் பனை வெல்லம், தேன் போன்றவற்றை இஷ்டத்துக்கும் வெட்டலாம். தேநீர் காபி இவற்றில் பால் சேர்க்காமல் டிகாஷனுடன் வெல்லைத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.  ஆரம்பத்தில் இது கஷ்டம் தான், ஆனால் சர்க்கரையை இன்றைக்குத் தின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் வாயைப் பூட்ட வேண்டுமா?   மேலும், சீசனில் வரும், மாம்பழம், சப்போட்டா, பலா, பேரீச்சம் பழம்  போன்றவற்றில் உள்ள இனிப்புக்கு இந்த வெள்ளைச் சர்க்கரை ஈடாகுமா என்ன?  இந்த வெள்ளை சர்க்கரை கருமத்தை நீக்கி விட்டால் மேற்கண்ட உடல் நலத்துக்குத் தேவையான பழங்களை வாழ்நாள் முழுவதும் உண்ணலாம் இல்லாவிட்டால், ஆங்கில மருத்துவன் வருவான் மேற்கண்ட பழங்களை உண்ணாதே என்பான் அந்த கூமுட்டையனுக்குத் தெரியாது இவை நமக்காகவே படைக்கப் பட்டவை என்று, அப்புறம் சர்க்கரை மாத்திரையைத் தின்னச் சொல்லுவான் அதுவும் போதாதுன்னு பென்சிலீனை ஊசியால் ஏற்றுவான், கடைசியாக கை, கால் விரல்களை வெட்டிப் போடுவான், குஷ்ட ரோகியைப் போல ஆக வேண்டும்.  தேவையா இது?!!



 


Thursday, May 2, 2013

பகுத்தறிவு வாதிகள் என சொல்லிக் கொள்ளும் பகுத்தறியாவாதிகள்

வணக்கம் மக்கள்ஸ்!!

சமீபத்தில் ஒரு நண்பர், தனிப்பட்ட முறையில் மிக நல்ல மனிதர், தனது கல்லூரிக் கால காதல் வாழ்க்கையைப் பற்றிய அவரது பேட்டியை ஒரு வார இதழில் வெளியானது குறித்து பதிவிட்டிருந்தார்.  காதலிச்சு திருமணம் செய்திருக்கிறார்.  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். அதுக்கு மேல அது பத்தி நாம் ஒன்னும் சொல்லப் போவதில்லை.   அவர் அத்தோட நிறுத்தியிருக்கலாம், ஆனா தான் எப்படி மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழித்து அவங்க அறிவுக் கண்களை திறக்கிறேன் என்பதையும் அதனுடன் கலந்துவிட்டிருக்கிறார்.  அங்கதான் நமக்கு இடிக்குது.

அவர் சொல்ல வருவது, "என் திருமணதிற்கு நல்ல நாள், கெட்ட நாள் எதுவும் பார்க்கவில்லை, ஏனெனில் பகுத்தறிவுப் படி அப்படியொரு நாள் இல்லை".  ஆஹா..... அருமை........  விஞ்ஞான ரீதியா பார்த்தா இது சரிதான்.  நாம் இதையும் கேள்வி கேட்கப் போவதில்லை. அதையடுத்து ஒரு பாயிண்டைத் தூக்கி போடுகிறார்.  நான் பெரியார் பிறந்தநாளில் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அது நடக்க வில்லை, பின்னர் காத்திருந்து அண்ணா திருமண நாளில் மணமுடித்தேன்.  இங்க தான் இடிக்குது.  ஒரு தலைவர்  120 அல்லது 130 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாளில் பிறக்கிறார், ரைட்டு, அவர் பிறந்ததால் அந்த நாள் விஞ்ஞான ரீதியாக, பகுத்தறிவு ரீதியாக ஏதாவது ஒரு சிறப்புத் தன்மையைப் பெறுகிறதா?  அந்த நாளில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் கொள்கையில் வெற்றியடைவீர்கள் என்று அர்த்தமா?  தலைவர் பிறந்த நாளை மட்டும்தானா தேர்ந்தெடுக்க வேண்டும் பிறந்த நேரத்தையும் கண்டுபிடித்து அதே நேரத்தில் தாலி கட்டலாம்.  அதை ஏன் விட்டீர்கள்? 

ஒரு தலைவர் பிறந்த நாள் செப்டம்பர் 15 என்றால், அடுத்தடுத்த மாதங்களிலும் 15 தேதி வரும், அதற்க்கெல்லாம் சிறப்பு எதுவும் கிடையாதா?  அல்லது புதன் கிழமை பிறந்தார் என வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு புதன் கிழமைக்கும் ஏதாவது சிறப்பு இருக்காதா?  அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றால், தலைவர் பிறந்த நாளில் இருந்து 365-தே கால் நாட்கள் இடைவெளியில் வரும் நாளுக்கு மட்டும் விஞ்ஞான ரீதியாக சிறப்பு வந்து விடுமா?

அதுசரி இன்னொரு தலைவர் பிறந்த நாளில் மணமுடித்தீர்கள், அந்த தலைவர் கொள்கை ரீதியாகவாவது உங்க தலைவரோடு ஒத்துப் போனவரா?  கடவுள் என்று எதுவும் இல்லை, அதை கற்பித்தவன் முட்டாள், வணங்குபவன் காட்டுமிராண்டி, இதுதானே ஐயா உங்க தலைவரோட கொள்கை? ஆனா, அண்ணாவோட திருத்தப் பட்ட கொள்கை என்ன?  "ஒன்றே குலம், [பரவாயில்லை தப்பில்லை விட்டுடடலாம்], ஒருவனே தேவன்!!" அதாவது   கடவுள் ஒருத்தன்-  இது தான் உங்க தலைவர் கொள்கையா?  எப்படிப் பார்த்தாலும் இடிக்குதே ஐயா?

இப்படி ஒருத்தர் என்றால், இன்னொருத்தர் இருக்காரு.  அவரோட பேரிலும் ஒரு மதி இருக்கு.  அவர் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி உங்க கண்ணை திறந்து விடுபவர்.

ஒருத்தர் கேட்கிறார்,

"பெரியாருக்கு சிலை வக்கிறீங்களே, இது பகுத்தறிவா?"

அதற்க்கு பதில் இப்படி தருகிறார்:

"வாழ்ந்து மறைந்த தலைவர் தானே அவர், ஆகையால் அவருக்கு சிலை வைக்கலாம், அதற்க்கு மாலை போடலாம், மரியாதை செய்யலாம், தப்பேயில்லை.".

எனக்கு இங்க என்ன புரியலைன்னா,  ஏன் மாலையோட மட்டும் நிறுத்தனும், தினமும் தேங்காய், பழம் வைத்து ஆரத்தி காட்டலாம், நல்லா பகுத்தறிவை பரப்புவதற்கு அருள் புரிக என்று வேண்டுதல்களை வைக்கலாம். என்ன தப்பு?  நீங்க போட்ட ரோஜாப்பூ மாலையை ஏற்றுக் கொண்டு அதை நுகர்ந்து பார்த்து, "ஆஹா அருமையான வாசனை" என்று சொல்லத் தெரிந்த சிலைக்கு, நீங்க வைக்கும் தேங்காய், பழங்களையும் ஏற்றுக் கொள்ளத் தெரியாதா?  [இதையும்  சிலர் செய்யக்கூடும், யார் கண்டது!!]   உங்க ஆசைகளையும் நிறைவேத்தி வைக்க முடியாதா?   சிலைகள் கல்லு, அதை வணங்குவது மூடநம்பிக்கை என்றால் எந்த சிலைக்கும் அது பொருந்தும் தானே?  அதென்ன கணக்கு, வாழ்ந்து மறைந்தவர் சிலைக்கு மட்டும் உசிர் வந்திடும் என்பது?  உங்க தலைவர் சிலை கல்லோ, உலோகமோ அல்லது சிமாண்டோ தானே?  அதெப்படி உங்க தலைவராக முடியும்?  அவ்வாறு நினைப்பது முட்டாள் தனம் என்பது தானே உங்க கொள்கை, திரும்ப நீங்களும் அதையே செய்கிறீர்களே, இது தான் பகுத்து அறிந்ததா?

பகுத்தறிவுவாதிகளே, நீங்க உங்க அறிவை என்னைக்கும் உபயோகப் படித்தியதாகத் தெரியவில்லை.  உங்க தலைவர் எனக்கு சிலையை வையுங்கடா என்றார், நீங்களும் பூம்........பூம்........ மாடு மாதிரி தலையாட்டி விட்டு செய்து வருகிறீர்கள் செம்மறி ஆடுகள் போல கேள்வியே கேட்காமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் பகுத்தறிந்தவன், சுயமாக சிந்திக்கக் கூடியவன், விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எனக்கு உண்மை என்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன்.........  இப்படியெல்லாம் டமாரம் அடிக்கும் நீங்கள் உங்கள் மதியை எந்த அளவுக்கு சிந்திக்கப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? நீங்கள் என்றைக்காவது உட்கார்ந்து சிந்தித்திருந்தால் இந்த மாதிரி பகுத்தறிவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை, பகுத்தறியா வாதிகள்.

வணக்கம் மக்கள்ஸ்.........!!




Wednesday, May 1, 2013

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்காக............





குழந்தைகள் முன்னைலையில் செய்யக்கூடாதவை!!!
************************************************

*கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


_________________________________________________

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!
 
நன்றி:  Facebook